கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை நாமெல்லாம்
சுமந்துகொண்டிருக்கிறோம். ‘காட்டுக்குட்டி’ அந்தக் கனவைத்
தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக
நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக
இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பாலியல் சுரண்டல்,
சமூக ஏற்றத்தாழ்வு, பிற்போக்குத்தனம் ஆகிய வேட்டை விலங்குகள்
உலவும் இருண்ட காடாக உள்ளது.
இளம் படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற
நூலாசிரியர் மலர்வதியின் இந்தப் புதினம் சமூகம் புறக்கணித்துள்ள
விபச்சாரிகளின் மன உணர்வுகளையும் அவர்கள் எவ்வாறு உருவாக்கம்
பெறுகிறார்கள் என்பதையும் வேதனையுடன் சித்திரிக்கிறது.