ஒரே உலகில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் ஓர் உலகைத் தனக்கென உருவாக்கி வைத்திருப்பதைப் போல் இதில் வரும் கதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு கதையைத் தனியே உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, கதை என்று சொல்வதை விட கதைகளின் கதை என்று இந்நாவலை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
வாழ்வைப் போலவே புனைவுக்கும் மையம் என்றொன்று தேவைப்படுவதில்லை. பயணமே போதுமானதாக இருக்கிறது.
எதை நோக்கிய பயணம்?
இழத்தலில் இருந்து மீட்டெடுத்தலுக்கு; ஞாபகங்களிலிருந்து மறதிக்கு; நிஜத்திலிருந்து கற்பனைக்கு; அச்சத்திலிருந்து நம்பிக்கைக்கு; வாழ்விலிருந்து மரணத்துக்கு. மீண்டும் மரணத்திலிருந்து வாழ்வுக்கு.
இந்தப் பயணம் புதிய திசைகளைக் கண்டறிவதாகவும் புதிய சாத்தியங்களை முன்வைப்பதாகவும் புதிய விவாதங்களை எழுப்புவதாகவும் இருப்பது தற்செயல்ல.
இந்நாவலின் மாந்தர்கள் இரு மாறுபட்ட உலகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அதே சமயம் அந்த இருவேறு உலகுகளையும் இணைக்கும் பாலமாகவும் திகழ்கிறார்கள். இயல்பான, யதார்த்தமான மனிதர்கள் அசாதாரணமானவர்களாக மாறும் அற்புதத்தை இந்நாவல் அழகாகப் படம் பிடிக்கிறது. உண்மைதான், நிஜ வாழ்க்கை புனைவைவிட விந்தையானது.