தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும் தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும் இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் எதிரெதிரானவையா?
வரலாற்றை அவ்வப்போது மீள்பார்வை பார்க்கவேண்டியது அவசியம். புதிய ஆய்வுகளின் ஒளியில், புதிய புரிதல்களின் அடிப்படையில் திரிபுகளைச் சரி செய்வதும் இடைவெளிகளை நிரப்பவதும் முக்கியம். அவ்வாறு செய்வது கடந்த காலத்துக்கு மட்டுமல்ல எதிர்காலத்துக்கும் நல்லது. அந்த மகத்தான பணியைத்தான் தன் வாழ்நாள் எல்லாம் செய்து வந்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி. சங்ககாலம் தொடங்கி சமீபத்திய காலம்வரை பல்வேறு தலைப்புகளில் ‘தினமலர்’ இதழில் அவர் எழுதி வந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வரலாறு, இலக்கியம், இலக்கணம், தொன்மம், பண்பாடு, மதம், மொழி, சமூகம் என்று பல விரிவான தளங்களில் பயணம் செய்வதோடு அவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப் புதிய தரிசனங்களையும் அளிக்கிறது இந்நூல்.
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் கடந்த காலத்தை நடுநிலையோடும் அறிவியல் நோக்கோடும் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஒரு பொக்கிஷம்.