மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு. உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது.
சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையும் முரண்களையும் அரவிந்தனின் இந்நூல் ஆராய்கிறது. எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்த கட்சிக் கொள்கைக்கும் ஒப்புக்கொடுக்காமல் துணிவோடும் சிந்தனைத் தெளிவோடும் மிகச் செறிவான உரையாடலை அரவிந்தன் இதில் நிகழ்த்துகிறார். வெறும் பரபரப்புச் செய்திகளாக நாம் கடந்து சென்றுவிட்ட பல நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் உளவியலையும் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் உதவும்.