தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாய் எழுதி வரும் ஆனந்த் ராகவ் சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்டச் சிறுகதைகள், மூன்று ஆங்கில நாடகங்கள் உட்பட பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். 2017 இல் வெளிவந்த “நிபுணன்” திரைப்படம் மூலமாக திரைக்கதை வசனகர்த்தாகவாக திரையுலகிலும் அறிமுகமானவர்.
இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதை பரிசுகள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இந்தியராமாயணங்களோடு தாய்லாந்து, மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமயணங்களை ஒப்பிட்டு எழுதிய “ராமகியன்” என்கிற இவரது புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று.
***
“ஆனந்த் ராகவ் இன் கதைகள் நேரடியாக வாசகர்களுடன் பேசுபவை, பாசாங்கில்லாத, பூடகமில்லாத அவரது கதாபாத்திரங்களை அன்றாடம் நாம் சந்திக்கலாம். சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசை மாறும் முடிவு என்று ஆரம்பகாலத்திலேயே தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக்கொண்டவர். ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை.” – பா.ராகவன்
***
“சுஜாதாவின் சிறுகதைகளில் கிடைக்கும் சம்பாஷணை சுகங்கள் ஆனந்த் ராகவ் கதைகளில் கிடைக்கின்றன. சூழலின் வர்ணனைகள் மிகவும் துல்லியமான பார்வையுடன், மிகவும் கூர்மையாக எவ்வித பிரயாசையும் இன்றி எதேச்சையாக வந்து விழுகின்றன.” – கி. பென்னேஸ்வரன்
***
“மெலிதான பகடி கலந்த மொழி ஆனந்த் ராகவினுடையது. ஆனால் நுட்பமானது. அது பகடி எனப் புரிந்து கொள்ள 79ம் அதற்குக் கீழும் ஐக்யூ உள்ளவர்களுக்கு சில நொடிகள் பிடிக்கும்.” – மாலன் நாராயணன்.
***
“எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சிறுகதைகளில் ஆனந்த் ராகவின் ” துளி விஷம்” கதையும் உண்டு.” – இரா. முருகன்