அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
கடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உயிரினம் ஒன்று, கப்பல்களை விபத்துக்குள்ளாக்குவதாகத் தகவல்கள் வருகின்றன. அந்த உயிரினத்தைத் தேடிப் புறப்படுகிறது ஒரு போர்க் கப்பல். அதுவும் விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்த மூவர் உயிர் தப்பி, அந்த மர்மமான பொருள் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதை அறிகிறார்கள். அந்தக் கப்பலின் கேப்டன் இவர்களைச் சிறை பிடித்து, ஆழ்கடலில் சாகசப் பயணத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆழ்கடலில் என்ன நடக்கிறது, மூவரும் தப்பினார்களா என்பதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த நாவல்.