எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்த் தேசியர்களுக்கு ஏறுதழுவல் குறித்த வரலாற்றுப் பெருமிதம் வேண்டும். நாம் ஐந்தாயிரம் ஆண்டு விளையாட்டு ஒன்றுக்குச் சொந்தக்காரர்கள் என்ற தமிழினச் செருக்கு வேண்டும். வெறும் முந்நூறு நானூறு ஆண்டுப் பழமைகளை, கலைகளைக் காட்டி பெருமைகொள்ளும் உலக நாடுகளின் நடுவில், என் மொழியும் கலையும் விளையாட்டும் வீரமும் காதலும் இவ்வளவு பழமையானவை எனச் சொல்லி நம்மினத்தை உலகில் தூக்கி நிறுத்த வேண்டும். குழலினிது யாழினிது என என் 2000 அகவைக் கிழவன் பாடிய அந்தத் தமிழ்ச் சொற்கள் இன்றும் எனக்குப் புரிகிறது, நாலாயிரம் ஐந்தாயிரம் ஆண்டுமுன் என் முன்னோர் தழுவிய அதே காளைத் திமில்களை நானும் இன்று தழுவி நிற்கிறேன் என்பதெல்லாம் சாதாரணச் செய்திகளா? உலகின் ஒரு சில இனங்களுக்கு மட்டுமே வாய்க்கும் அரும்பேறிது எனத் தமிழர் உணர வேண்டும்.