ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 2 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வயது, சாதி, மதம், வர்க்கம், பாலினம் என்று எந்தப் பேதமும் இன்றி இவ்வளவு பேர் தற்கொலையை நாடுவது குடும்பத்துக்கு, சமூகத்துக்கு, ஏன் தேசத்துக்கே ஓர் அபாயகரமான போக்கு. உலகம் தழுவிய அளவில் விரிந்திருக்கும் இந்த முக்கியமான பிரச்னையைத் தீர்க்கவேண்டுமானால் முதலில் தற்கொலை பற்றிய ஓர் அடிப்படை புரிதல் அவசியம்.
· தற்கொலை உணர்வு ஏன் ஒருவருக்கு ஏற்படுகிறது?
· ஆண்கள், பெண்கள் இருவரில் யார் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? ஏன்?
· தற்கொலைக்குக் காரணம் தனி நபர்களா அல்லது சமூகமா?
· மருத்துவம், சட்டம், மதம் ஆகியவை தற்கொலையை எப்படி அணுகுகின்றன?
· உளவியல் ரீதியில் தற்கொலையை எப்படிப் புரிந்துகொள்வது?
· ஒருவருக்குத் தற்கொலை உணர்வு உள்ளது என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்கமுடியுமா?
· தற்கொலையைத் தடுக்கமுடியுமா?
தற்கொலை பற்றி இதுவரை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுள்ள ஆய்வுகள், திரட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், நடத்தப்பட்ட விவாதங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்துக்கொண்டு இந்த முக்கியமான புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதனைத் தடுத்து நிறுத்துவதும்தான் இந்தப் புத்தகத்தின் தலையாய நோக்கம்.
டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா. MB.BS., FRCPsych: கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய சிறப்புத்துறை சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மனநலமாகும் (Child and Adolescent Psychiatry). பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் மனநலத்துறை விரிவுரையாளராகவும் முதுகலைப்படிப்பில் தேர்வாளராகவும் மனநலப் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் எழுதிய Psychological basis of Psychiatry மற்றும் Developmental Assessment of the School-aged Child with Developmental Disabilities ஆகிய நூல்கள் முதுகலைப் படிப்பில் பாடப் புத்தகங்களாக உள்ளன. ஒரு சிறப்பு ஆசிரியையுடன் சேர்ந்து இவர் அண்மையில் எழுதிய Essentials of Learning Disabilities and Other Developmental Disorders (Sage, India; 2016) என்ற புத்தகம் இந்தியச் சூழலுக்கு அமைய கற்றல் குறைபாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள சிறார்கள் பற்றி ஆசிரியர்களுக்காக எழுதப்பட்டதாகும். இவர் பல தொழில்சார் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் புத்தகங்களும் மீளாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.